முன்குறிப்பு : வழக்கம் போலவே சிறுகதை எழுத ஆரம்பிச்சு , பெருங்கதைல போய் முடிஞ்சிருச்சு , அதனால பாவம் நீங்க .!!
வானத்தில் சில மேகக்கூட்டங்கள் மாலை 4 மணிக்கே சூரியனைச் சூழ்ந்துகொண்டு இருளினை அழைத்துக்கொண்டிருந்தன. செல்வாவும் ரமேசும் ஏதோ விவாதித்த படியே பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.
" மச்சி நான் கேட்டதுல என்ன தப்பு .? ஏன் அவன் முறைச்சு முறைச்சுப் பார்த்தான்.? " என்றான் செல்வா.
" ஏன்டா உனக்கு எப்படி பேசனும்னே தெரியாதா , நீ எதுக்கு சந்தோசம் அப்படின்னு அவன்கிட்ட சொன்ன..? " என்றான் ரமேஷ் சற்றே கோபத்துடன்.
"அதிகமா பழக்கம் இல்லாதவங்க எதவாது சொன்ன சந்தோசம் அப்படின்னு சொல்லுனு எங்க அப்பா சொன்னார்., அதான் சொன்னேன். இதிலென்ன தப்பு இருக்கு..? அதுக்கு எதுக்கு முறைச்சான்.?" என்றான் செல்வா.
" கிழிச்ச , அதுக்காக உடம்புக்கு சரியில்லை அப்படின்னு சொல்லுரவன்கிட்ட சந்தோசம்னு சொன்னா கொஞ்சுவானா..? " என்றான் ரமேஷ்.
" சரி விடு மச்சி இனிமேல் மாத்திக்கலாம்., உடம்பு சரியில்லன்னு யாரவது சொன்னா என்ன கேக்கணும்..? "
" யாராவது உடம்பு சரியில்லைன்னு சொன்னா " இப்ப பரவால்லையா..?" அப்படின்னு கேக்கணும்., இது கூடவா தெரியாது .? " என்று தலையில் அடித்துக்கொண்டான் ரமேஷ்.
" அப்போ மண்டைய போட்டுட்டாங்க அப்படின்னு சொன்னா என்ன கேக்கணும் மச்சி.? " என்றான் செல்வா.
ரமேஷ் ஒருமுறை முறைத்துவிட்டு " சாரிங்க " அப்படின்னு சொல்லு போதும் என்று சொன்னவன் ஒரு பேக்கரியில் வண்டியை நிறுத்தினான்.
" இரண்டு டீ போடுங்க , ஒண்ணு ஆத்தாம " என்று ஆர்டர் செய்துவிட்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ரமேசின் நண்பன் பிரவீன் எதேச்சையாக அங்கு வந்தான். செல்வாவிற்கு அதிகப்பழக்கம் இல்லையானாலும் கொஞ்சம் பழக்கமிருந்தது. சிறிதுநேரம் மூவரும் பேசிக்கொண்டிருந்தனர். செல்வா பிரவீன் வீட்டிலுள்லோரின் நலத்தினை விசாரித்துக் கொண்டிருந்தான்." பாட்டி நல்லா இருக்காங்களா..? " என்றான் செல்வா பிரவீனிடம்.
பிரவீன் சற்று வாட்டத்துடன் " அவுங்க இறந்த்துட்டாங்க , உடம்பு சரியில்லாம இருந்தாங்க.? " என்றான்.
இதைக்கேட்ட செல்வா " ஓ , சாரி , இப்ப பரவால்லையா..? " என்றான்.
பிரவீன் ரமேசை முறைத்தவாரே " சரி பார்க்கலாம் " என்று கூறிவிட்டு சென்றுவிட்டான். அவன் அகன்றதும் ரமேஷ் செல்வாவை எரித்துவிடுவது போன்று பார்த்தான்.
" ஏன்டா உனக்கு எந்த நேரத்துல எப்படிப் பேசுறதுனே தெரியாதா.? ஏன்டா என்னோட உயிரை வாங்குற..? " என்று கத்தினான் ரமேஷ்.
" ஏன் மச்சி , நான் சரியாத்தானே சொன்னேன்.? " என்று குழம்பியவாறே கேட்டான் செல்வா.
" கோவத்தக் கிளப்பாத , அவனே அவுங்க பாட்டி செத்திட்டாங்க அப்படின்னு சொல்லுறான் , அப்புறம் எதுக்கு இப்ப பரவால்லையா அப்படின்னு கேட்ட..? "
" நீதானே மச்சி சொன்ன , உடம்பு சரியில்லன்னு யாராவது சொன்னா " பரவால்லையா " அப்படின்னு கேக்கணும் , இறந்துட்டாங்க அப்படின்னு சொன்னா " சாரி " சொல்லனும்னு. அதான் அவன் பட்டி இருந்துட்டாங்க அப்படின்னு முதல்ல சொன்னான் , அதுக்கு சாரி சொன்னேன் . அப்புறம் உடம்புசரியில்லாம இருந்தாங்க அப்படின்னு சொன்னான் அதனால " பரவால்லையா " அப்படின்னு கேட்டேன். இதுல என்ன தப்பு இருக்கு ..? "
" சத்தியமா உன்னயெல்லாம் திருத்தவே முடியாதுடா , எனக்கு இதவிட பெரிய சந்தேகம் என்ன அப்படின்னா உன்னையும் ஒருத்தி காதலிக்கிறா அப்படின்னு சொல்லுறியே அதான். நீயே ஒரு அரை லூசு , உன்ன லவ் பண்ணுரவ முக்கா லூசாத்தான் இருப்பா..? எப்படியோ போய்த் தொலைங்க..! " என்றவாறே பைக்கை ஸ்டார்ட் செய்தான் ரமேஷ்.
******************************************************************************************
இரண்டுநாள் கழிந்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் மணி 8 ஆகியும் படுக்கையில் இருந்து எழுந்தரிக்காமல் படுத்திருந்த ரமேஷை அவனது மொபைல் selva calling என்று எழுப்பியது.
" சொல்டா.."
" மச்சி , அவ ஏமாத்திட்டாடா..! " என்று தழுதழுத்தான் செல்வா.
" டேய் , என்ன சொல்லுற..? என்னால நம்பவே முடியல..?! " என்றான் விறுவிறுப்பானான் ரமேஷ்.
" ஆமாண்டா , எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியல , செத்துப்போலாம் போல இருக்கு..?! " என்று அழுதே விட்டான்.
" டேய் டேய் , என்ன இது லூசாட்டமா பேசுற , இரு 10 நிமிசத்துல வரேன்.! " என்று கட் செய்துவிட்டு வேகவேகமாக செல்வாவின் வீட்டிருக்கு விரைந்தான் ரமேஷ்.
செல்வாவின் வீட்டை அடைந்ததும் செல்வா அழுதுகொண்டிருந்தது தெரிந்தது. ரமேஷ் சிறிது நேரம் செல்வாவிற்கு ஆறுதல் கூறிப்பார்த்தான். ஆனாலும் செல்வா அழுகையை விடுவதாகத் தெரியவில்லை.
" சரி , கிளம்புடா , ஒரு பக்கம் போலாம்..! " என்று செல்வாவை வலுக்கட்டாயமாக TASMAC என்ற இடத்திற்கு அழைத்துக்கொண்டு சென்றான் ரமேஷ்.
" இங்கயா ..?!" என்றான் செல்வா சற்றே தயக்கத்துடன்.
" ஆமாண்டா , ஒரு ரண்டு ரவுண்டு விட்டா எல்லாத்தையும் மறந்திடுவ..! " என்று பேசிக்கொண்டு உள்ளே செல்ல முற்படுகையில் சண்முகம் அங்கே வந்து சேர்ந்தான்(ள் ).
( சண்முகம் ஒரு திருநங்கை. இருந்தாலும் பெற்றோரின் ஆதரவு இருப்பதால் அவளுக்கு தனியாக செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை. ரமேஷ் , செல்வா , சண்முகம் மூவரும் ஒரே பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தனர். வெளியிலும் பள்ளியும் ஏற்பட்ட அவமானங்களால் எட்டாம் வகுப்பிலேயே படிப்பினை நிறுத்திவிட்டான் சண்முகம். பின்னர் சண்முகம் தனது பெயரை சண்முகி என்று மாற்றிக்கொண்டான். செல்வா , ரமேஷ் இருவரும் அவளது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதால் மூவரும் நல்ல நண்பர்களாக விளங்கினர்.!)
" இங்க என்னடா பண்ணுறீங்க.?" என்று கேட்டவாறே இவர்களை நெருங்கினாள் சண்முகி.
" இல்ல , சும்மா .! " என்று சாமாளிக்கப்பார்த்தான் ரமேஷ்.
" டாஸ்மாக்ல சும்மா என்ன வேலை ..? ஒழுங்கா சொல்லிடுங்க..! " என்று அதட்டலாகக் கேட்டாள் சண்முகி.
" இவனோட லவ்வர் , இவன லவ் பண்ணலைன்னு சொல்லிட்டா அதான் ஒரு ரவுண்டு அடிச்சா சரியாய்டும் அப்படின்னு கூட்டிட்டு வந்தேன்..!" என்றான் ரமேஷ்.
" தண்ணி அடிச்சா , சரியாயிடுமா..? " என்றாள் சண்முகி.
" என்னோட பீலிங் உனக்குத் தெரியாது..! " என்று சற்றே கோபமாக கூறினான் செல்வா.
" ஆமா , எல்லோரும் அப்படித்தானே நினைக்கிறீங்க , நீங்களாவது பரவா இல்ல. இன்னும் சிலர் இருக்காங்க , எங்கள அவன் , அவள் அப்படின்னு கூட கூப்பிடறதில்லை அது அப்படின்னு சொல்லுறாங்க. அப்பவெல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா.? இதெல்லாம் தாண்டி வாழவேண்டியிருக்கு..! சரி அத விடு.! உன்னோட கதைய சொல்லு." என்று முடித்தாள் சண்முகி.
" எங்க வீட்டுக்கு எதிர்த்த வீட்டுல ஆறு மாசத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு குடிவந்தது. நல்லாத்தான் பழகுச்சு. என்னைய எங்க பார்த்தாலும் சிரிக்கும் ., எங்க தெருவிலேயே என்கூடத்தான் நல்லாப் பேசுவா.., எல்லோருமே அவ என்னைய லவ் பண்ணுறா அப்படின்னு சொன்னாங்க. எனக்கும் தெரியும் அவ என்ன லவ் பண்ணுறா அப்படின்னு. அதனால ரொம்ப சந்தோசமா இருந்தேன். சரி நான் லவ் பண்ணுறத எப்படியாவது அவ கிட்ட சொல்லணும் அப்படின்னு இன்னிக்கு காலைல போய் அவகிட்ட சொன்னேன் . அதுக்கு அவ " நான் உங்களை அப்படி நினைக்கவே இல்ல , நல்ல நண்பனாகத்தான் நினைச்சேன்.." அப்படின்னு சொல்லிட்டா. எனக்கு அப்படியே செத்துப்போகணும் போல இருந்துச்சு தெரியுமா..?! " என்று அழுது புலம்பினான் செல்வா.
" விடு மச்சி , இந்தப் பொண்ணுகளே இப்படித்தான் , ஏமாத்துறதுல அவுங்கள மிஞ்ச முடியாது..!" என்று ஆறுதல் கூறினான் ரமேஷ்.
" சொல்லுவீங்கடா , யாரோ சொன்னாங்க அப்படின்னு பொண்ணுக பின்னாடி சுத்த வேண்டியது , அப்புறம் காதலிக்கலை ஏமாத்திட்டா அப்படின்னு பொண்ணுக எல்லோருமே ஏமாத்துறாங்க அப்படின்னு திரியவேண்டியது. இதிலையும் உன்ன மாதிரி சில தறுதலைகள் சேர்ந்துட்டு சோகத்தைப் போக்குறேன் அப்படின்னு சொல்லிட்டு தண்ணி அடிக்க வேண்டியது அப்புறம் இருக்குற காசு எல்லாத்துக்கும் தண்ணியப் போட்டுட்டு சேவிங் பண்ண காசு இல்லாம தாடி வச்சிட்டு கேட்டா காதல் தோல்வி அதான் தாடி வச்சிட்டேன் அப்படின்னு சொல்ல வேண்டியது. மொதல்ல உங்களை மாதிரி ஆளுகள ??..! " என்று பிரிந்து தள்ளினால் சண்முகி.
" நிறுத்து , நாங்களாவது காதல் தோல்விக்கு இத்தன பண்ணுறோம் , எதாவது ஒரு பொண்ணாவது தண்ணி போட்டுட்டு அவுங்களோட வாழ்க்கைய காதலுக்காக தியாகம் பண்ணிருக்காங்களா..? என்றான் செல்வா.
" உன் மனசாட்சியத் தொட்டு யோசிச்சுப்பாரு ஒரு பொண்ணு தண்ணி அடிச்சிட்டு ரோடுல போனா விட்டுருவீங்களா..? அவள பேசிப் பேசியே கொன்னுட மாட்டீங்க., இல்ல கல்யாணம் ஆகாம வீட்டுல இருந்தான் விட்டுருவீங்களா..? அவளுக்கு என்னமோ பிரச்சினை அது இதுன்னு எத்தனையோ பட்டம்கட்டி அவள மட்டும் இல்ல அவ குடும்பத்தையே மானத்த வாங்குவீங்களே..! அப்புறம் பொண்ணுக்கு தாஜ்மகால் கட்டினாங்க ஏதாவது ஒரு பொண்ணாவது ஆணுக்காக ஏதாவது செஞ்சால அப்படின்னு சொல்லவேண்டியது.. நான் தெரியாமத்தான் கேக்குறேன் தாஜ்மகால் கட்டின காலத்துல இருந்து இதுவரைக்கும் பொருளாதார அடிப்படையில பொண்ணுங்க சுதந்திரமா இருக்காங்களா.? கல்யாணத்துக்கு முன்னாடி அப்பாவையும் , கல்யாணத்துக்கு அப்புறமா புருசனையும் , அப்புறம் மகனையோ மகளையோ சார்ந்து இருக்குற மாதிரியான சமூக அமைப்புல அவுங்களால என்ன செஞ்சிட முடியும்..? பண்ணுறதெல்லாம் நீங்க , பழி மட்டும் அவுங்க மேலயா..? நல்லா இருக்குடா உங்க நியாயம்..! உங்களுக்கு காதல் தோல்வி அப்படின்னா தண்ணி அடிக்க வேண்டியது , தாடி வளர்க்க வேண்டியதுனு சுத்துரீங்க , ஆனா அவுங்களால அதைய அப்படியெல்லாம் காட்டிக்க முடியாம மனசுக்குள்ளயே அழுத்தி வச்சுட்டு , குடும்ப சூழ்நிலை காரணமா கல்யாணம் பண்ணி போனா என்னைய ஏமாத்திட்டு போறா , பொண்ணுங்களே இப்படித்தான் அப்படின்னு சொல்லுறது.! உங்களுக்கு காதல் தோல்வில எத்தனை வலி இருக்கோ அதே அளவு வலி பொண்ணுகளுக்கும் இருக்கு அப்படிங்கிறத தெரிஞ்சிக்கோங்க.! " என்று முடித்தாள் சண்முகி.
" ஓ ,சாரி , தெரியாம பண்ணிட்டேன்.! இனிமே இந்த மாதிரி பண்ண மாட்டேன்..! " என்று மன்னிப்புக் கேட்டான் செல்வா.
" ஆமா மச்சி , நானும் கொஞ்சம் உன்ன உசுப்பி விட்டுட்டேன் , தண்ணி அடிச்ச சோகம் போய்டும் அப்படின்னு சொன்னது என்னோட தப்புத்தான்..! என்னையும் மன்னிச்சிரு.." என்றான் ரமேஷ்.
" சரி விடுங்க , அப்புறம் அந்தப் பொண்ணு கடைசில நண்பன்னு நினைச்சு பழகினேன்னு தானே சொல்லுச்சு ., அதனால ஒண்ணும் பயப்படாத எத்தனையோ நண்பர்கள் காதலர்களா மாறிருக்காங்க..! அதனால சந்தோசமா போ..! சரி எனக்கு நேரம் ஆச்சு , நான் கிளம்புறேன் " என்று கூறிவிட்டு சென்றாள் சண்முகி.
செல்வாவும் , ரமேஷும் சந்தோசமாக பைக்கினை ஸ்டார்ட் செய்தனர். போகும் வழியில் செல்வா ரமேசிடம் " மச்சி , ஒரு சந்தேகம் ..? "
" சொல்லு .., "
" தண்ணி அடிக்கிறது அப்படின்னு சொன்னீல , அத எப்படி அடிக்கிறது..? அடிச்சா அதுக்கு வலிக்காதா..? "
" வீட்டுக்குப் போக வரைக்கும் ஒழுங்கு மரியாதையா வாய வச்சிட்டு வந்திடு.!! " என்று சிரிததவாறே சொன்னான் ரமேஷ்.!
நீதி : லட்சம் தடவ காதல்ல தோற்றாலும் பொண்ணுகளுக்கு தாடி வளராது. அதனால தாடி வளர்த்துட்டேன் எனக்குத்தான் சோகம் , பொண்ணுக தாடி வளர்க்கரதில்லை அதனால அவுங்களுக்கு சோகம் இல்லை அப்படின்னு சொல்லிட்டு திறியாதீங்க..!
நீதி 2 : ஒழுங்கு மரியாதையா மொக்கையே போட்டிருக்கலாமோ ..?!
ஒரு அறிமுகம் : நான் இந்தக் கதைல திருநங்கைகளைப் பற்றி கொஞ்சம் சொல்லலாம்னு நினைச்சேன் , ஆனா கதையின் நீளம் அதிகமா போய்டும் அப்படிங்கிறதால சொல்லமுடியல. ஆனா அதுக்காக சில பதிவுகளப் படிச்சேன். அந்த சமயத்துல தான் நம்ம லக்கிலுக் அண்ணன் புதிய தலைமுறைல ஒரு திருநங்கயோட வலைப்பக்கத்த பத்தி சொல்லிருந்தார்.அங்க நானும் சில பதிவுகள் படிச்சேன் .. உண்மைலேயே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. உங்களுக்கு நேரம் இருந்தா நீங்களும் படிச்சு பாருங்க.! அந்த வலைப்பக்கம் இதோ
http://livingsmile.blogspot.com ..
பின்குறிப்பு : இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் செல்வா கோமாளியயோ, ரமேஷ் ரொம்ப நல்லவனையோ அல்லது பிரியமுடன் ரமேசையோ குறிப்பிடுவன அல்ல.!!