Monday, April 11, 2011

அம்மா.!

முன்குறிப்பு : கொஞ்ச நாளுக்கு முன்னாடி அப்பா.! அப்படின்னு ஒரு பதிவுல அப்பா பற்றி எழுதிருப்பேன். இன்னிக்கு அம்மா பற்றி எழுதிருக்கேன். கண்டிப்பா ஒரு நிமிடமாவது உங்கள் அம்மாவைப் பற்றிய நினைவுகள் உங்களுக்கு வரும்! ஒரு சிறுகதைல இருக்கக் கூடிய திடீர் திருப்பங்களோ விறுவிறுப்போ இருக்காது :-)


கால் மேலாகவும் தலை கீழாகவும் வைத்து சோபாவில் படுத்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தான் ராகுல். உள்ளிருந்து அவனது அம்மாவின் குரல் கேட்டது.

" வெங்காயம் வாங்கிட்டு வச்சொன்னேனே வாங்கிட்டு வந்தியா ? "

" ஐயோ மறந்திட்டேன் ..! "

" ஆமா நான் சொன்னா இனி மறந்துதான் போகும் ,எல்லாம் சொல்லுறவ வந்து சொன்னாத்தான் இனி மறக்காது "

" ஐயோ .. எப்பப்பாரு கல்யாணம் கல்யாணம்னே பேசு! வேற எதுவுமே தெரியாதா ? "

" இனி அதத்தான்டா பேசுவோம் ! " 

" அப்பா எங்க ? " 

" அவர் தோட்டத்துல இருந்தார் ! "

ராகவன் கமலா தம்பதியினரின் ஒரு மகன் ராகுல். இருபத்தி ஏழு வயதான ராகுல் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிகிறான். ராகவன் அரசுப் பணியில் இருந்து இந்த ஆண்டுதான் ஓய்வு பெற்றார்.

தோட்டத்தில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்த ராகவனைப் பின்னால் இருந்து தொட்ட ராகுல், ராகவனின் கண்கள் கலங்கியிருந்ததைப் பார்த்தான். 

" அப்பா என்னாச்சு ? "

" ஒன்னும் இல்லடா , பாட்டிய நினைச்சாதான் ரொம்ப அழுகையா வருது ! "

எண்பது வயதான ராகவனின் அம்மா உடல்நலம் மோசமடைந்து மருத்துவர்களும் கைவிரித்ததால் தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள்.

"பாட்டிய நினைச்சா எனக்கும் ரொம்ப கஷ்டமாதான் இருக்குப்பா! "

" அவளப்பத்தி சொன்னா சொல்லிட்டே போகலாம்டா , அம்மாங்கிற உறவு எவ்ளோ அழகானதுன்னு யாராலையும் சொல்லிட முடியாது! " என்று கூறியவர் அவரது குழந்தைப் பருவத்திலிருந்து சொல்ல ஆரம்பித்தார்.

" நான் 3 வயசு வரைக்கும் தாய்ப்பால் குடிக்கிறத விடலையாம் . எப்படியாவது மறக்க வைக்கனும்னு என்னைய எங்கம்மா, அவுங்க அம்மா வீட்டுல கொண்டு போய் விட்டுட்டு ஒரு வாரம் என்னப் பாக்கவே வரலையாம். ஒருவாரம் கழிச்சு என்னப் பாக்க வந்தபோது நான் கண்ணுல தண்ணி விட்டுட்டே ஓடி வந்து மறுபடி பால்குடிச்ச்சேனாம். இத அடிக்கடி சொல்லிட்டே இருப்பா!"

நான் முதல் தடவையா குப்புற விழுந்தது , தவழ்ந்தது இப்படி ஒன்னு ஒண்ணா ரசிச்சிருக்கா. தவழ்ந்து பழகி கொஞ்ச நாள்ல நான் அடிக்கடி தவழ்ந்துட்டே வெளில போய்டுவேணாம். இப்படி ஒருநாள் வெளியே போய் வயிறு முட்ட மண்ணத் தின்னுட்டதால வயிறு உப்பிப் போய் மூச்சு வர கஷ்டப்பட்டதால ஹாஸ்பிட்டல் எடுத்துட்டுப் போனாங்களாம். அப்ப இருந்த நிலைல நான் பிழைக்கவே மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம்.

நான் பிழைக்கணும்னு எத்தனை வேண்டுதல்கள் , அழுகைகள்னு நிறைய சொல்லிருக்கா. அப்புறம் எப்படியோ பிழைச்சு வந்துட்டேன். அப்புறம் அதே கொஞ்சநாள்ல மறுபடி நான் மண்ணு திண்ணுறதப் பார்த்துட்டு செம அடி விழுந்துச்சு. அப்போ எங்க அப்பா வந்து என்னை தூக்கிட்டார். அப்பலேர்ந்து நான் எங்க அம்மா கிட்ட அதிகமா பேசுறதே இல்ல. அம்மாவப் பார்த்தவே மூஞ்சியத் திருப்பிட்டு எதோ சண்டைக்காரனப் பாக்குறது மாதிரி இருந்திருக்கேன். சொல்லப்போனா அப்பா பையனாவே மாறிட்டேன்.

நான் மூணாவது படிச்சிட்டிருக்கும்போது எங்கப்பாவுக்கும் எங்க அம்மாவுக்கும் பயங்கர சண்டை. அப்போ எங்கம்மா என்னை தூக்கிட்டு அவுங்க அம்மா வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு என்னைத் தூக்குறதுக்காக வந்தா, ஆனா நான் எங்கப்பா கிட்டப் போய் ஒளிஞ்சிக்கிட்டேன். அவ்ளோ நேரம் எங்கப்பா கூட சண்டைப்போட்டு கொஞ்சம் கூட அழாதவ நான் வரமாட்டேன்னு சொன்னதும் ஒடஞ்சுபோய் ரொம்ப அழுதா. பாக்க அவ்ளோ பாவமா இருந்துச்சு.

இந்த நேரத்துல மத்த ஆம்பிளையா இருந்திருந்தா கண்டிப்பா சண்டை பெரிசா ஆகிருக்கும். ஆனா எங்கப்பாவுக்கு எங்கம்மா அழறதப் பார்த்ததும் இவ்ளோ நேரம் போட்ட சண்டையெல்லாம் எங்க போச்சுனே தெரில. அப்படியே என்னையும் எங்க அம்மாவையும் சேர்த்து அணைச்சிக்கிட்டார். அப்போ அவரும் ரொம்ப அழுதார். அப்பத்தான் உண்மையான லவ்னா என்னன்னு தெரிஞ்சிக்கிட்டேன்.

நான்தான் வளர்ந்தேனே தவிர , அவ வளரவே இல்ல. அவளுக்கு நான் எப்பவுமே குழந்தைதான். அடிக்கடி திட்டுவா , அடிப்பா , கதை சொல்லுவா முக்கியமா முத்தம் கொடுப்பா.! எங்க போனாலும் பார்த்து நிதானமா போன்னு சொல்லுவா., இப்படி சொல்லிட்டே போலாம். ஆனா நான்தான் அவளோட அன்பைப் புரிஞ்சிக்காம நிறைய தடவ அழ வச்சிருக்கேன்.!"

" அப்பா என்னப்பா சொல்லுறீங்க .? நீங்க பாட்டிய நல்லாத்தானே பாத்துக்குறீங்க ?! "

" என்னத்தப் பாத்துக்கிட்டேன்.? எத்தனையோ தடவ வேணும்னே அழ வச்சிருக்கேன். வளர வளர அவளோட பாசத்தையெல்லாம் பைத்தியகாரத்தனமாவே நினைக்க ஆரம்பிச்சிடறோம்.எத்தனையோ தடவ ஊருக்குப் போகும்தும் ,ஹாஸ்டலுக்குப் போகும்போதும் போனதும் போன் பண்ணுனு சொல்லுவா. அப்ப எனக்கு அது லூசுத்தனமாத் தெரிஞ்சது. நீ பிறந்த அப்புறம்தான் எனக்கு புரிய ஆரம்பிச்சது. என்ன இருந்தாலும் பெத்த மனம் பித்து , புள்ள மனம் கல்லுங்றத எல்லோரும் நிரூபிக்கிறோம்.

14 , 15 வயசுல வெயில்ல விளையாடிட்டு வேர்வையோடு வரும்போது " அப்பிடிப் போய் வெளையாடலைனா ஆகாதா ? " அப்படின்னு திட்டிட்டே முந்தானையாள முகத்தைத் தொடச்சு விடும்போதும் , மழைல நனைஞ்சிட்டு வந்தா தலை துவட்டி விடும்போதும் , இன்னும் சின்னக் குழந்தைல மூக்குல ஒழுகுற சலிய அப்படியே மூக்கு வலிக்க அழுத்தி எடுத்து விடும்போதும் உணர்ற ஸ்பரிசம் , பாசம் உலகத்துல யாராலையும் கொடுக்க முடியாது.

" அது உண்மைதான்ப்பா! "

" என்மேல எவ்ளோ பாசம் வச்சிருந்தாளோ அதே மாதிரி உங்க அத்தை பிரியா மேலயும் அவ்ளோ பாசம். பைய்யன் ,பொண்னு அப்படின்னெல்லாம் பிரிச்சுப் பாக்க மாட்டா.

பிரியாவுக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் ஆனதிலிருந்து எங்கம்மா ரொம்பவே சோர்ந்து போயிட்டா. " ஒன்னும் தெரியாத வெளையாட்டுப் புள்ளயா இருக்காளே , போற எடத்துல எப்படி இருப்பாளோ"னு தினமும் பொலம்பிட்டே இருப்பா. கல்யாணம் பண்ணிக்குடுத்து ரண்டு மாசம் அங்கயும் இங்கயும் அலைஞ்சிட்டே இருந்தா. பொண்னு மேல அவ்ளோ பாசமா இருந்ததாலதான் உங்கம்மா கிட்டவும் அவ பொண்னு மாதிரியே நடந்துக்கிட்டா. ஒருநாள் கூட மாமியார் , மருமகள் சண்டை வந்ததே இல்ல.

எப்பவுமே எதுக்குமே அழமாட்டா. தாத்தா இறந்த போது அப்படியே பித்துப் பிடிச்சவளாட்டம் இருந்தா.ரண்டு மூணு நாள் சுயநினைவே இல்ல. அவ்ளோ லவ் பண்ணிருக்கா.அப்புறம் இந்த நாலு வருசத்துல எதுக்குமே அழல.

ஒரு மாசமா சோறு திங்காம கிடக்குறா . பாதிநாள் அவ கூடவேதான் இருந்தேன். வழக்கம் போல அட்வைஸ் பண்ணிட்டுத்தான் இருந்தா. ஆனா இன்னிக்கு காலைல மட்டும் என்னையப் பார்த்ததும் கண்ணுல தண்ணி மொளு மொளுனு போச்சு. எதுவுமே பேசல. கைய கெட்டியா கொஞ்ச நேரம் பிடிச்சிட்டு என்னையவே பார்த்தா , அப்புறம் ஏனோ கைய விட்டுட்டு திரும்பிப் படுத்திட்டா. ஒருவேளை அவளுக்கே பயம் வந்திடுச்சோ.? நம்மல விட்டுப் பிரிஞ்சு போய்டுவோமோன்னு வருத்தம் வந்திடுச்சு போல. எனக்கு என்ன பன்னுறதுனே தெரிலடா" என்றவாறே தனது மகனின் முன்னாலேயே அழத் தொடங்கினார்.

" அப்பா , என்னப்பா இது ? நீங்களே இப்படி அழுதா நாங்க ? "

" நான் உனக்கு அப்பாவா இருந்தாலும் அவளுக்கு மகன் தானேடா? இவ்ளோ வருஷம் என் கூடவே இருந்து அத செய்யாத இத செய்யதனு சொல்லிட்டு இருந்தவ , எங்க போனாலும் நான் எவ்ளோ பெரியவனா இருந்தாலும் ஒரு குழந்தைக்கு சொல்லுற மாதிரி பார்த்துப் போ, பார்த்துப் போ அப்படின்னு சொல்லிட்டே இருந்தவ , இன்னிக்கு ?!! " என்று சத்தமாகவே அழத் தொடங்கினார் ராகவன்.

பின்குறிப்பு : இந்தப் பதிவு உங்க அம்மாவை ஞாபகப் படுத்தியிருந்தால் எனக்கு மிக மகிழ்ச்சி. இந்தப் பதிவினை பற்றிய உங்களது பின்னூட்டங்களை வைத்து அடுத்து இதே மாதிரி குடும்ப உறவுகள மையப்படுத்தி கதைகள் எழுத உதவியா இருக்கும்.!