Wednesday, February 22, 2012

அவ்வ்வ்வ் - ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை


முன்னுரை

   சிறிது நாட்களுக்கு முன்னர் “ங்கொய்யால” என்னுமோர் தெய்வீகச் சொல்லுக்கான ஒர் ஆய்வுக்கட்டுரை எழுதியிருந்தது நாடறிந்ததே. நீங்களும் அறிந்திருப்பீர். அந்தக் கட்டுரையை எழுதுவதற்கு நான் பட்ட இன்னல்கள் கொஞ்ச, நஞ்சமல்ல. ஆனாலும் அந்தக் கட்டுரையை மக்கள் கொண்டாடிய விதம் என்னை மீண்டும் அதே போன்றதொரு அற்புதக் கட்டுரையைப் படைப்பதற்கான ஆவலைத் தூண்டியது. அந்தக் கட்டுரையைப் பற்றி திருவள்ளுவர் உள்பட பல சமகால இலக்கியவாதிகள் தத்தமது இணைய தளங்களில் பாராட்டியிருந்தது மகிழ்வளிப்பதாக இருந்தது. அதே சமயம் சிலர் அந்தக் கட்டுரையில் உண்மை இல்லையென்றும் , அது வெறும் கட்டுக்கதை என்றும் கூறியிருந்ததிலிருந்து அவர்களின் பொறாமையை என்னால் அறிய முடிந்தது. ஏனெனில் அந்தக் கட்டுரை வெளியான பின்பு அச்சொல்லின் மீதான தமது எண்ணத்தை மாற்றிக் கொண்டு அந்தச் சொல்லைக் கற்றுக் கொண்டதாக ரஷிய இலக்கியவாதியான தஸ்தாயெவ்ஸ்கி கூறியிருந்ததே இதற்குச் சான்றாகும்.

”அவ்வ்வ்வ்”வின் தோற்றம்

   “அவ்வ்வ்வ்”.... என்னே ஒரு அழகான சொல்! எத்தனை முறை உச்சரித்தாலும் புல்லரிக்க வைக்கும் ஒரே சொல் ”அவ்வ்வ்” மட்டுமே என்பதில் தினையளவும் சந்தேகமில்லை.தினை என்பது என்னவென்று உங்களுக்குச் சந்தேகம் இருக்கலாம். எனவே தினையளவு என்பதை அரிசியளவு என்று மாற்றிப் படித்துக் கொள்ளுங்கள். சரி விசயத்திற்கு வருவோம். ”அவ்வ்வ்வ்” என்ற சொல்லினைத் தோற்றுவித்தது, அதனை அனைவரும் பயன்படுத்தும்படி செய்தது நகைச்சுவை நடிகர் வடிவேலு என்கிற கருத்து நிலவிவருகிறது. ஆனால் உண்மையில் “அவ்வ்வ்வ்” என்ற சொல் சங்ககாலம் தொட்டே பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. ஆனால் ”அவ்வ்வ்வ்” என்ற சொல்லின் பொருளைப் பற்றி அறியாமல் அதனைப் பயன்படுத்தி வருவது சற்று வருந்தத்தக்கதே! 

”அவ்வ்வ்வ்”வின் பொருள்

   ”அவ்வ்வ்” என்ற சொல்லிற்கு என்ன பொருள் இருந்துவிட முடியுமென்று பலரும் ஏளனம் செய்து சிரிக்கின்றனர். உண்மையில் ”அவ்வ்வ்” என்ற சொல்லின் பொருள் “அண்டா” என்று எங்களுரில் ஒரு தமிழிலக்கியவாதி தெரிவித்திருக்கிறார். அது எப்படி “அண்டா “ என்ற பொருள் வருமென்று உங்களுக்குக் குழப்பமாக இருக்கலாம். அவர் வாங்கிய அண்டா ஒன்றிற்கான  பெயர் எழுதிக் கொண்டிருக்கும்போது எதேச்சையாக அவரது தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்ததாகவும், அப்பொழுது இவர் “அவ்வ்வ்” என்று கத்தியவாறே அந்த அழைப்பினை ஏற்றதாகவும், அப்பொழுது அண்டாவிற்குப் பெயர் எழுதுபவர் அண்டாவின் பெயரை “அவ்வ்வ்” என்று எழுதிவிட்டதாகவும் கூறினார். இப்பொழுது சொல்லுங்கள், அந்த அண்டாவில் யாருடைய பெயர் எழுதப்பட்டிருக்கிறதோ அது அவர்களுடைய பொருளாகும். இந்த அண்டாவில் விதி வசத்தால் “அவ்வ்வ்” என்று எழுதப்பட்டிருக்கிறது. எனவே “அவ்வ்வ்”வின் பொருள் அண்டாதானே? 

”அவ்வ்வ்”வும் ஔவையாரும்

    தமிழ் கூறும் நல்லுலகில் சிலர் “அவ்வ்வ்” என்ற சொல்லிற்கும் ஔவைக் கிழவிக்கும் தொடர்பிருப்பதாகக் கூறிவருகின்றனர். அவர்களின் கூற்றுப்படி ”அவ்வ்வ்” என்ற சொல்லினைக் கண்டுபிடித்ததே ஔவையார்தான் என்கிறார்கள். அதாவது ”அவ்வ்வ்”வை யார் கண்டுபிடித்தது?” என்ற சொல்லிற்கு விடையாக ஔவைப் பாட்டியின் பெயரைச் சொல்லி வந்ததாகவும், பின் அவரது பெயருக்குப் பதிலாக “அவ்வ்வ்”வை யார்” என்ற கேள்வியையே பயன்படுத்திப் பின்னர் “அவ்வையார் - ஔவையார்” என்று மாறியதாகச் சிலர் ஐயுறுகின்றனர். ஆனாலும் “அவ்வ்வ்”வை யார் கண்டுபிடித்தார்கள் என்கிற வரலாறு நமக்குக் கிடைக்காமலே போனது தமிழ்மொழியின் மிகப் பெரும் துரதிருஷ்டமாகக் கருதப்படுகிறது.

”அவ்வ்வ்”வும் தமிழக அரசும்

   “அவ்வ்வ்” என்ற சொல்லின் அருமை பெருமைகளை அறிந்த தமிழக அரசு இந்தச் சொல்லின் வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இந்தச் சொல்லினை உரக்கக் கத்தி இன்புற வேண்டுமென்றே தற்பொழுது முக்கால் மணிக்கொருதரம் மின்சாரத்தை நிறுத்தும் திட்டத்தினைக் கொண்டுவந்திருப்பது பாராட்டப்பட வேண்டியதாகும். தமிழக அரசின் இந்தத் திட்டம் பெருவெற்றி பெற்றிருப்பது நாமறிந்ததே. ஒவ்வொரு முறை மின்சாரம் நிறுத்தப்படும்போதும் எல்லா கிராமம் மற்றும் நகரங்களிலிருந்து “அவ்வ்வ்” என்ற இந்தச் சொல்லின் சப்தம் நம் காதுகளில் தேனினைப் பாயச் செய்கிறது என்றால் அது மிகையாகாது. அதிகப்படியான தேன் என் காதுகளில் பாய்ந்துவிட்டதால் நேற்றுத்தான் காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் எனது பற்களைச் சோதனை செய்துகொண்டேன். தமிழ்மொழியின் தன்னிகறற்ற சொல்லான “அவ்வ்வ்”வினை நாடெங்கும் ஒலிக்கச் செய்ய வேண்டுமென தமிழக அரசு எடுத்திருக்கும் இந்த மின்சாரத்தடைத் திட்டத்திற்கு ஒவ்வொரு தமிழரும் நன்றி கூற வேண்டியது அவசியமாகிறது.

இணையத்தில் ”அவ்வ்வ்”வின் பங்கு

   பெரும்பாலும் தமிழ் மொழியின் புகழ் பெற்ற எல்லாச் சொற்களுமே இணையத்தில் அதிக மதிப்பைப் பெறுவது வழமையானதே. அதே போல நமது இந்த உலகப் புகழ் பெற்ற “அவ்வ்வ்” என்ற சொல்லும் இணையத்தளங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இந்தச் சொல் பெரிதளவில் பயன்படுத்தப்படுவதாக கி.மு.2400 ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு அறிவிக்கிறது. மேலும் ஒரு இது போன்ற சமூக வலைத்தளங்களில் இந்தச் சொல் நொடிக்கொருமுறையேனும் பயன்படுத்தப்படுமென திட்டவட்டமாகச் சொல்கிறது. தமிழ் இணையவெளியில் புழங்கும் ஒவ்வொரு தமிழரும் இந்தச் சொல்லினைப் பயன்படுத்தாமல் இருக்கமுடியாதென்றும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பயன்கள்

   “அவ்வ்வ்” என்ற இந்தச் சொல் பல விதங்களில் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்தச் சொல்லினைக் கூட்டாக, பத்திற்கும் மேற்பட்டோர் சேர்ந்து உச்சரிக்கும்போது நாய்கள் பயந்து ஓடுவதைப் பார்க்க முடிகிறது. ஏதேனும் கேள்விக்குப் பதிலளிக்க முடியாதவர்களுக்கு இந்தச் உடுக்கை இழந்தவன் கை போலப் பேருதவி புரிவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. மேலும் ஏதேனும் கோபமான பொழுதுகளில் இந்தச் சொல்லினைப் பயன்படுத்துவது எதிராளியினைப் பெருமிதப்படுத்துவதோடு, அவரது கோபத்தினையும் சற்று குறைப்பதாக மனநல ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். எனினும் “அவ்வ்வ்” என்ற இதன் பயன்களை யாராலும், எந்தக் காலத்திலும் முழுமையாகச் சொல்லிவிட இயலாதென்பது மட்டும் திண்ணம்.

முடிவுரை

   தமிழ்மொழியில் மிக முக்கியச் சொல்லாக வலம்வரும் இந்த “அவ்வ்வ்” வின் தோற்றம் மற்றும் பயன்களை இந்தக் கட்டுரையின் மூலமாக நம்மால் தெள்ளத் தெளிவாக அறிந்துகொள்ளமுடிந்தது. மேலும் இந்தச் சொல்லினைக் கேட்கக் கேட்க அடுத்து இந்தச் சொல்லினை எப்பொழுது யார் வாயால் கேட்போமோ என்கிற ஏக்கம் நமக்கு வராமலிருப்பதில்லை. இந்தச் சொல்லின் பெருமைகளைப் பற்றித் தெரிந்து கொண்டுள்ள ஆங்கிலேயர்கள் “அவ்வ்வ்” என்ற சொல் ஆங்கில மொழிக்குச் சொந்தமானது என்று போராடத் துவங்கியுள்ளாதாகச் சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. எனவே நமது தமிழ் மொழியின் மிக முக்கியச் சொல்லான “அவ்வ்வ்”வினைப் பாதுகாக்கும் பொருட்டும், அதனை பிறர் கவர்ந்து கொள்ளக் கூடாததன் பொருட்டுமே இந்தக் கட்டுரையை அவசரகதியில் எழுதநேர்ந்தது. எனவே எல்லோரும் சேர்ந்து போராடுவோம் “அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்”!


Saturday, February 4, 2012

தங்கம்

முன்குறிப்பு : குழந்தைகளுக்கான சிறுவர் நீதிக் கதைகள் வரிசையிலான எனது முதல் சிறுகதை முயற்சி இது.

முன்னொரு காலத்தில் மயிலூர் என்னும் சிற்றூரில் விவசாயி ஒருவர் வசித்துவந்தார். காலையில் எழுந்ததும் தனது மாடு, கன்றுகளை தோட்டத்திற்கு அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அவர் தனது வீட்டில் தங்கம், வெள்ளி மற்றும் பித்தளைப் பாத்திரங்கள் சிலவற்றை வைத்திருந்தார். அவற்றில் தங்கப் பாத்திரத்தை மட்டும் தன்னிடமிருந்த அழகான பெட்டியொன்றில் வைத்துப் பாதுகாத்துவந்தார்.

சில நாட்களுக்குப் பிறகு தங்கப் பாத்திரங்களை மட்டும் தனியாக எடுத்து அருகில் இருந்த குப்பைத்தொட்டியில் வீசியெறிந்துவிட்டு, தங்கப் பாத்திரம் இருந்த பெட்டியில் பித்தளைப் பாத்திரத்தை எடுத்து வைத்துவிட்டு வழக்கம்போலவே தோட்டத்திற்குச் சென்றுவிட்டார்.

தன்னைத் தங்கம் இருந்த இடத்தில் வைத்ததற்கு பித்தளைக்கு ஆணவம் ஏற்பட்டது. தங்கத்தைப் பலவாறு ஏளனம் செய்தது. தங்கம் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதாமல் அமைதியாக இருந்தது.

பித்தளையின் இந்த ஏளனத்தை வெள்ளிப் பாத்திரம் கவனித்துக் கொண்டிருந்தது. அதுவும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தது.

சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கே வந்த திருடன் அங்கிருந்த முக்கியமான பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பித்தளைப் பாத்திரத்தைத் தங்கப் பாத்திரமென நினைத்து, அதனைத் திருடிக்கொண்டு சென்றுவிட்டான்.

மாலையில் வீடு திரும்பிய அந்த விவசாயி தனது வீடு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும், ஊரெல்லாம் பேசப்பட்ட அந்தத் திருடனின் வேலையாகத்தான் இருக்குமென்று ஊகித்துக் கொண்டு வேக வேகமாக வந்து குப்பைத் தொட்டியைப் பார்த்தார். 

அங்கே அவர் தூக்கி வீசிய தங்கப் பாத்திரம் அமைதியாகக் காத்திருந்தது. அதைப் பார்த்ததும் நிம்மதியடைந்தார் விவசாயி. இந்தத் தங்கப் பாத்திரத்தைப் பாதுகாப்பதற்காகத்தான் அவர் அதனைக் குப்பையில் வீசி எறிந்தார் என்பதை தங்கமும், வெள்ளியும் புரிந்துகொண்டன.