Monday, March 5, 2012

இன்னும் ஒரு எலி!


இன்றுடன் அவன் கதை முடிந்தது. ஆறுமாத கால எதிரியை எத்தனையோ சூழ்ச்சிகள் செய்து இறுதியாகச் சாப்பாட்டில் விஷம் வைத்துதான் கொல்ல முடிந்திருக்கிறது. இதோ என் கண் முன்னால் தன் நான்கு கால்களையும் பரப்பிக்கொண்டு , கோரமாகச் செத்துக் கிடப்பதைப் பார்க்கும்போது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எவ்வளவுதான் தொல்லைகள் கொடுத்திருந்தாலும் ஒரு அஃறிணை உயிரான எலியை அது என்று விளிக்காமல், அவன் இவன் என்று விளிப்பது உங்களுக்குக் கொஞ்சம் அசூசையாக இருக்கலாம். ஆனால் அவன்( அது) என் வீட்டிற்கு வந்த கடந்த ஆறு மாத காலத்தில் என் வாழ்க்கையில் ஏற்படுத்திய கொடூரங்களைத் தெரிந்து கொண்டால் அவனைத் தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் முக்கிய வில்லனாக நடிக்கச் சிபாரிசு செய்வீர்கள்!

கிராமத்திற்கும் , நகரத்திற்கும் இடைப்பட்ட இந்த ஊரில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில்தான் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். என் சொந்த ஊரிலிருந்து நான் பணிபுரியும் இந்த ஊர் மிகத் தொலைவில் உள்ளதாலும், இந்த ஊரிலிருந்து அருகில் இருக்கும் மற்றொரு வசதி படைத்த நகரமும் கொஞ்சம் நெடுந்தொலைவிலேயே இருக்கிறபடியால் இங்கேயே , இந்த ஊரிலேயே தங்கித் தொலைய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளானேன். இந்த ஊரில் தங்கத் தொடங்கிய முதல் நான்கு மாதங்கள் நன்றாகத்தான் கழிந்தன.ஐந்தாவது மாதத்தின் முதலாவது வாரத்தின் எட்டாவது நாளில்தான் என்னுடைய அனுமதியின்றி என் வீட்டிற்குள் நுழைந்துவிட்டான் இந்தப் படுபாதகன். வாரத்திற்கு எப்படி எட்டாவது நாள் என்று குழம்பவேண்டாம். இவனது கொடூரத் தொல்லைகளால் நான்தான் அவ்வாறு தவறுதலாக எழுதிவிட்டேன்.

கடந்த ஆறுமாத காலமாக நான் பெற்ற துன்பங்களையும், துயரங்களையும் எழுத இந்த உலகத்திலுள்ள காகிதங்கள் போதாது. இதெல்லாம் போதாதென்று “ மதியழகன் சார்” என்கிற எனது அழகான பெயரை மாற்றி “ எலிக்குட்டி வாத்தியார் “ என்னும் கேவலமான பெயரையும் பெற்றுத் தந்திருக்கிறான். என்னதான் எனக்குச் சரிசமமான எதிரியென்றாலும் இனியும் இந்தச் சாதாரண பொல்லாத எலியை அவன், இவன் என்று விளித்தால் நீங்கள் கொஞ்சம் குழம்பிப் போவீர்கள் என்பதற்காக இனிமேல் “அது” என்றே எழுதுகிறேன்.

இவனைக் கொன்றொழிக்கக் கடந்த ஆறு மாத காலமாக நான் எடுத்த நடவடிக்கைகளில் நூற்றில் ஒரு பங்கு கூட ராவணனைக் கொல்ல ராமன் எடுத்திருக்கமாட்டான். ராவணனைக் கொல்ல அவன் தம்பியே ராமனுக்கு உதவியதாக இதிகாசங்கள் கூறுகின்றன. அதுபோல இதனைக் கொல்லவதற்கு எனக்கு உதவ, இதன் உயிர் எங்கே இருக்கிறதென்று சொல்ல இந்த எலிக்கு ஒரு தம்பி கூட இல்லை. இருந்தால் மட்டும் எங்கிருந்து கண்டுபிடிப்பது? எல்லா எலிகளும் குடும்ப அட்டை வைத்துக்கொண்டு இலவச அரிசி வாங்கியா வாழ்க்கையை ஓட்டுகின்றன?

இது என் வீட்டில் அத்துமீறி நுழைந்த முதல் இரண்டு நாட்களில் மட்டும் எனக்கு 800 ரூபாய் செலவு. அது ஒன்றும் திறந்திருந்த வீட்டுக் கதவின் வழியே திருடன் நுழைவதைப் போல பூனை நடைபோட்டுக் கொண்டு நுழையவில்லை. அது பூனை நடை போட (CAT WALK) என் வீடென்ன பேஷன் ஷோ மேடையா ? ஒருநாள் நள்ளிரவில் என் வீட்டுக் கூரையில் “ கரக் கரக் “ என்ற சத்தம் கேட்டது. தூக்கம் வராததால் கரப்பான் பூச்சிதான் "ஒய் திஸ் கொலைவெறி “  பாடலை தனது மொழியில் ரீமேக் செய்து பாடிப்பார்க்கிறதோ என்று சமாதானமானேன். மீண்டும் அதே “ கரக் கரக் “. ஆனால் கொஞ்சம் உச்சஸ்தாதியில். நேரமோ நள்ளிரவு; இருப்பதோ தனிமையில்; வீடோ புதிது. யோசித்துப் பாருங்கள் என் நிலையை. கை, கால்கள் எல்லாம் நடுங்குகிறதா? அது ஒன்றுமில்லை, ஏர் கண்டிசனரைக் கொஞ்சம் அதிகக் குளிரில் வைத்துள்ளீர்கள். இவ்வளவு மின்சாரப் பற்றாக்குறை உள்ள காலத்தில் எதற்காக இப்படி A/C யை எல்லாம் போட்டுக்கொண்டு ஏன் இப்படி நடுங்குகிறீர்கள்? நீங்கள் இதில் கொஞ்சம் மின்சாரத்தை மிச்சம் பிடித்தால் மின் தட்டுப்பாட்டை ஓரளவாவது சரி செய்திட இயலும்.கொஞ்சமேனும் பொறுப்பாக நடந்துகொள்ளுங்கள். என்ன,அமெரிக்கா அல்லது சிங்கப்பூரில்   இருக்கும் நாங்கள் A/C பயன்படுத்தாமல் இருப்பதற்கும், தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாட்டிற்கும் என்ன சம்பந்தம் என்றா கேட்கிறீர்கள். மன்னித்துவிடுங்கள். கரண்ட் என்றால் எங்களுக்குக் கடவுள் போல மாறிவிட்டது. அதனால் கொஞ்சம் ஆத்திரமடைந்துவிட்டேன்.

இப்போது இன்னும் அருகில் “ கரக் கரக் “. என் கால்கள் நடுங்க ஆரம்பித்தன. A/C காரணமல்ல. இந்தமுறை பேய் வந்துவிட்டதோ என்ற பயம்தான் காரணம். இந்தவீட்டில் இதற்கு முன்னர் குடியிருந்தவர்கள் யாரேனும் காதல் தோல்வியால் தூக்குப்போட்டுக் கொண்டவர்கள் பேயாக வந்து பயப்படுத்துகிறார்களோ என்று நினைக்க நினைக்க கால்கள் இரண்டும் இசையில்லாமலேயே மைக்கேல் ஜாக்சனுக்குச் சவால்விட்டன. ஒருவேளை மைக்கேல் ஜாக்சனும் இப்படி எதையோ நினைத்துப் பயந்துதான் ஆடினாரோ என்னவோ ?

மறுநாள் காலையில் முதல் வேளையாக என் நண்பனிடம் இதைப் பற்றித் தொலைபேசினேன். அவனும் இது பேயின் வேலையாகத்தான் இருக்குமென்றும், அருகில் இருக்கும் கருப்பராயன் கோவிலில் சாமி கும்பிடு என்றும் அறிவுறுத்தினான். நானும் பயபக்தியுடன் அருகில் இருந்த கருப்பராயன் கோவிலுக்குச் சென்று, அங்கே சந்நதம் வந்து ஆடிக்கொண்டிருந்த பூசாரியை அணுகினேன். ஏதேனும் குறையிருப்பவர்கள் அவர் காலில் விழுந்தால், நமக்கு என்ன குறை என்று கண்டுபிடித்து, அதை எப்படிப் போக்குவது என்றும் பரிகாரம் சொல்லுவார். அதைப் போலவே சிலர் அவர் காலில் விழுந்து சாமி கேட்டுக்கொண்டிருந்தனர். நானும் அவர் காலில் விழுந்து, ஆவலாய் அவர் முகம் பார்த்தேன். முறுக்கு மீசையுடன் இருந்த அவரைப் பார்க்க கொஞ்சம் கோரமாக இருந்தாலும், பயத்தைக் காட்டிக் கொள்ளாமல் எழுந்து நின்றதும், என் தோளினை லேசாகப் பிடித்து, கொஞ்சம் கெட்டியாகப் பிடித்து இரண்டு உலுக்கு உலுக்கி, “ ஆடி கழிச்சு ஆவணிக்குள்ள் மழை பெய்யும் போ! “ என்றார்.

கூரையில் “கரக் கரக்” கிற்கும், மழை பெய்வதற்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும் என்று ஒருவாறு குழம்பியவாறே சந்தேகத்தைக் கேட்கலாம் என்று நினைத்தேன். அதற்குள் வேறொருவர் அவர் காலில் விழுந்துவிட நான் வெளியே தள்ளப்பட்டேன். ஆனால் இது பெருங்குழப்பமாக இருந்தது. ஒருவேளை மழை பெய்யும் வரையில் அந்தப் பேய் இருக்குமென்பதை மறைபொருளில், இலக்கியத் தன்மையுடன் கூறுகிறாரோ என நினைத்துக் குழப்பத்தப் போக்க மீண்டும் வரிசையில் நின்று, மீண்டும் காலில் விழுந்தேன். இந்த முறை “ அடுத்த ஆறு மாசத்துக்குள்ள கல்யாணத்த முடிச்சிடலாம், கவலைப்படாம போ “ என்றார். “ கரக் கரக்” சத்தத்திற்கும், கல்யாணத்திற்கும் என்ன எழவு சம்பந்தம் இருக்கிறதோ என்று தலையில் அடித்துக் கொண்டு வெளியே வந்தேன். இந்தக் குழப்பத்தில் அது என்ன “கரக் கரக்” சத்தம் என்பதையே மறந்து போயிருந்தேன். பின் வழக்கம் போலவே பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பினேன். அன்று இரவு வரை எனக்கு அந்த “கரக் கரக்” சத்தியமாக நினைவிலில்லை. காரணமென்னவென்றால் நான் உண்மையில் கோவில் பூசாரியைப் பார்த்துக் கொஞ்சம் பயந்துவிட்டிருந்தேன்.

அன்றும் அதே நள்ளிரவு. அதே “ கரக் கரக்”. மீண்டும் பேய், பிசாசு பயம். அப்போது என் கால்கள் நடனத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்க எங்கோ தூரத்தில் “ நல்லகாலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது” என்ற குடுகுடுப்பைச் சத்தம். அந்த உடுக்கை ஒலி எனக்கு எப்பொழுதும் பயத்தைக் கொடுக்குமென்பதால் அருகில் கிடந்த துணி ஒன்றால் காதுகளை நன்றாக அடைத்துவிட்டுப் போர்வைக்குள் பதுங்கிக் கொண்டேன். எப்போது தூங்கினேனோ ?

காலையில் மீண்டும் அதே குடுகுடுப்பை ஒலிதான் என்னை எழுப்பிவிட்டது. இரவில் கேட்டதை விடக் கொஞ்சம் அருகில் கேட்டது. பெரும்பாலும் பகலில் செத்த பாம்பை அடிக்கும் அளவு தைரியமானவன் என்பதால் வீட்டை விட்டு வெளியே வந்தேன். குடுகுடுப்பைக்காரன் கையில் சில தாயத்துக்களுடன் குடுகுடுப்பை அடித்தவாரே போய்க்கொண்டிருந்தான். சட்டென ஒரு யோசனை. ஒருவேளை இவருக்குப் பேயோட்டவும் தெரியுமோ ? உடனே கடகடவென முகத்தைக் கழுவிக்கொண்டு, ஓட்டமாக ஓடி குடுகுடுப்பைக்காரனை நெருங்கி விசயத்தைச் சொன்னேன்.

“நைட்டானா தலைக்கு மேல ’கொரக் கொரக்’னு சத்தம் கேக்குதுங்க. ஒருவேளை பேய் இருக்குமோன்னு பார்த்துச் சொல்லுங்க “ அவரும் தனது குடுகுடுப்பையை ஒலித்தவாரே என் வீட்டை அடைந்தார். குடுகுடுப்பையை யார் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. ஆனால் அதன் ஒலி மட்டும் மிக பயங்கரமாக, அச்சுறுத்தும் விதமாகவே எனக்கு இருக்கிறது.

சிறிது நேரம் வீட்டிற்குள் அங்குமிங்கும் நடமாடியவர், திடீரென ஓரிடத்தில் வேகத்தடையைக் கண்டவர் போல சட்டென நின்று தலையை நிமிர்த்தி, மேலே விட்டத்தைப் பார்த்து,

“ இப்போ வெளிய வர்றியா, இல்லையா ? “

“ “

“ வரமாட்ட”

“ “

“உன்ன என்ன பண்றேன் பார் “ என்று கூறிவிட்டு என்னைப் பார்த்தார். பேய்களோடு மல்லுக்கட்டி எனக்குப் பழக்கமில்லையாதலால் எந்த நேரத்திலும் வெளியே ஓடுவதற்குத் தயாராக நின்று கொண்டிருந்தேன்.

“ தம்பி, இது காத்துப் பெரட்டுத்தான்! ஒரு எந்தரம் மந்திருச்சு வச்சா சரியா போய்டும் “

“ அப்புறமென்ன வச்சிருங்க “ என்றேன் பாலைவனத்தில் பனிமலையைப் பார்த்தது போல.

“ ஒரு 2500/- ரூவா ஆகும் “

“ இரண்டாயிரத்து ஐநூறா!? இந்த வீட்டுக்குக் குடுத்த அட்வான்சே 500 தாங்க. 2500 க்கு எந்தரம் வாங்கி வைக்கிறதுனா நான் இந்த வீட்ட விட்டுட்டு வேற வீடு பார்த்துக்குவேன்! “

சிறிது நேரத்திற்குப் பிறகு, பேயோட்டுவதில் பேரம் முடிந்து 500 ரூபாய எந்திரத்திற்கு வந்தது. ஆனால் இது சுவற்றில் மாட்டும் எந்திரமல்ல, இடுப்பில் கட்டிக் கொள்ளக்கூடிய தாயத்து. இது விலை குறைவாக இருந்தாலும் சுவற்றில் மாட்டும் எந்திரத்தை விட இதில் பலன்கள் அதிகமென்றே கருதுகிறேன். ஏனெனில் வீட்டில் மாட்டியிருக்கும் எந்திரங்கள் வீட்டுக்கு வந்தால் மட்டுமே பாதுகாப்பளிக்கும்.ஆனால் இடுப்பில்,கைகளில் கட்டியிருக்கும் தாயத்துகளோ நாம் போகுமிடமெல்லாம் கூடவே வந்து நமக்குத் தைரியம் அளிக்கும். ஒருமுறை நான் பள்ளியில் படிக்கும்போது எங்கள் தமிழ் ஆசிரியரைப் பார்த்துப் பயந்து போவதுண்டு. அப்பொழுதெல்லாம் இதுபோன்ற தாயத்துகள் என் பயத்தினைப் போக்கியிருக்கின்றன. ஆனால் தாயத்து பேயை ஓட்டுகிறது என்கிறார்கள், பின் எதற்காக உயிரோடிருக்கும் தமிழ் வாத்தியாரைக் கண்டு பயக்காமலிருக்கு இதைக் கட்டி விடுகிறார்களோ என்றுதான் குழப்பமாக இருக்கிறது!

தாயத்தினைக் கட்டும்போது சாம்பிராணி காட்டி கட்டிக் கொள்ளச் சொல்லிவிட்டு குடுகுடுப்பையை ஒருமுறை ஒலித்துவிட்டுச் சென்றார் குடுகுடுப்பைக்காரர். அப்பொழுது பள்ளிக்கு நேரமாகிவிட்டிருந்தபடியால் மாலையில் வந்து கட்டிக்கொள்ளலாம் என உத்தேசித்து பீரோவில் வைத்துப் பூட்டிவிட்டுப் பள்ளிக்குக் கிளம்பினேன்.

மாலையில் வீடு திரும்பியதும், முதல் வேலையாக அந்தத் தாயத்தினை எடுத்துக் கட்டிலின் மீது வைத்துவிட்டுச் சாம்பிராணி பற்ற வைப்பதற்காகச் சமையலறைக்குள் நுழைந்தேன். சாம்பிராணியை எடுத்துக்கொண்டு வந்து பார்த்தால் “ என்னே ஆச்சர்யம்!” தாயத்தைக் காணவில்லை. “ க இ ற ல ப ம ந ரி லு பே உ “ ஒன்றுமில்லை, பயத்தில் நாக்கு குழறிற்று. என்ன நடந்திருக்கும் என்றெல்லாம் கற்பனை செய்யமுடியவில்லை. பேய்தான் அதை எடுத்துச் சென்றுவிட்டதென்று முடிவே செய்துவிட்டேன். பேயை ஓட்டுவதற்காகத்தான்  நான் தாயத்தை வாங்கினேன் என்று அது தெரிந்துகொண்டு , இப்பொழுது இப்படிச் செய்கிறதென்று எனக்க்குள் தூங்கிக் கொண்டிருந்த ராமநாராயணன் தெரியப்படுத்தினார். இந்தச் சமயத்தில் மீண்டும் அதே “ கரக் கரக் “!

மேலே நிமிர்ந்து பார்க்கும் தைரியம் துளிகூட என்னிடமில்லை. அங்கே நிச்சயம் ஒரு பேய் தன் கோரப் பற்களில் ரத்தம் ஒழுக, தலைவிரி கோலமாக நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு என்னை விழுந்த வந்துகொண்டிருக்கும் என்று எனக்குள் இருந்த விட்டலாச்சாரியார் பயமுறுத்தினார். மொத்தத்தில் எனக்குள் நான் இல்லை. கடைசியாக அந்தப் பேயைப் பார்த்துவிட்டாவது செத்துப் போகலாம் என்று “ கரக் கரக்” வந்த இடத்தைப் பார்த்தபோது அங்கே வீட்டின் விட்டம்தான் தெரிந்தது. இப்படிப் பயந்து நடுங்கும் என்னை அந்த விட்டம் பரிதாபமாகப் பார்ப்பதாகத் தோன்றிற்று. ஆனாலும் அதற்குத்தான் கண்கள் இல்லையே!

விட்டத்தில் நாக்கு ஏதேனும் தொங்கிக்கொண்டிருக்கும் என்றுதான் சற்று உன்னிப்பாகக் கவனித்தேன். அப்படியெதுவும் இல்லாதது சற்று தைரியத்தைக் கொடுத்திருந்தாலும், அங்கே தொங்கிக் கொண்டிருந்த அந்தப் பொருள் அச்சத்தை ஏற்படுத்தியது. ஆம், காணாமல் போன தாயத்து அங்கே தொங்கிக் கொண்டிருந்தது. தாயத்து எங்கே அப்படி.? ஒருவேளை நள்ளிரவில் மின்வெட்டினால் ஏற்படும் இருளில் வெளிவரப் பயந்து , பயத்தினைப் போக்கத் தாயத்தினை எடுத்திருக்குமோ அந்தப் பேய்?

இப்படி யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான் தாயத்து இருந்த இடத்தில் "கரக் கரக்” சத்தம் மீண்டு(ம்) வந்தது. இப்பொழுது பயத்திற்குப் பதில் சிரிப்புத்தான் வந்தது. பின்னே எனக்கு வைத்திருந்த தாயத்தினை, அந்தப் பேய் தனக்கென எடுத்துக் கொண்டால் யார்தான் அதைப் பார்த்துப் பயப்பார்கள் ? ஆனால் இந்த ஏளனம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஆம் அந்தத் தாயத்து தொங்கிக் கொண்டிருந்த இடத்தில் இன்னும் ஒன்று தெரிந்தது. நன்றாக உற்றுப் பார்த்ததில் ஏதோ ஒரு உயிரின் வால் பகுதி என்பதும், அந்த வால் பகுதிக்குச் சொந்தமான உடல் பகுதி நிச்சயம் எலியினுடையதாகத்தான் இருக்க வேண்டுமென்றும் உறுதியானது. ஆக ஒரு சாதாரண எலியைக் கண்டு பயந்துவிட்டு, இல்லை காணாமல் பயந்துவிட்டு பேயென்றும், பிசாசென்றும் அலைந்து திரிந்திருக்கிறேன். வெளியில் தெரிந்தால் எவ்வளவு அவமானகிப் போகும்? அப்பொழுது இந்த எலி என் வாழ்க்கையின் மிக முக்கிய வில்லன் என்பது தெரிந்திருக்கவில்லை. இப்படியாக இவனது அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அடச்சே! என்ன இது? ஏதோ விருது கிடைத்ததைப் போலச் சொல்லுகிறேன்.

எலி ஒரு அற்புதமான விலங்கு. மனித வாழ்வியலின் மிக முக்கியப் பங்காளியாக விளங்குகின்றன எலிகள். மனிதனுக்காகக் கண்டுபிடிக்கப்படும் மருந்துகளைக் கூட முதலில் எலிகளே சுவைபார்க்கின்றன.எலிகள் முக்கியமாகக் கூரை வீடுகளிலும், ஓட்டு வீடுகளிலும் எப்படியேனும் குடிபுகுந்து தங்களது இருப்பை “கிரீச் கிரீச்” சத்தத்தின் மூலமோ , இல்லை கூரையைக் கடிப்பதின் மூலமோ மனிதனுக்குத் தெரியப்படுத்துகின்றன. மனிதன் தின்னும் எல்லா வகையான உணவுப் பொருட்களையும் எப்படியேனும் திருடித் தின்கின்றன. இரவுகளில் கூரையைக் கடித்தவாறே நமக்குத் துணை நிற்கின்றன. மின்சார ஒயர்களைக் கடிப்பது, டிவி கேபிள்களைக் கடிப்பது, புத்தகங்களைக் கடிப்பது, சட்டைகளில் ஜன்னல் வைப்பது போன்ற ஏதாவதொரு வேலையைச் சதா சர்வகாலமும் செய்துகொண்டேயிருக்கின்றன. தனிமையில் இருப்போரின் தனிமையைப் போக்குவதில் எலிகள் தனிச்சிறப்பாகச் செயல்படுகின்றன என்றே தோன்றுகிறது.

இந்த எலியைப் பார்த்த சில நாட்கள் அதை எப்படி என் வீட்டிலிருந்து விரட்டியடிப்பது என்று சில முயற்சிகள் செய்தேன். முக்கியமாகக் அதனைக் கொல்லும் எண்ணம் எனக்குச் சிறிதளவேனும் இல்லாததால் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. பூனை வளர்க்கலாம் என்று பரவலாக யோசனைகள் சொல்லப்பட்டாலும் எனக்கு அதில் விருப்பம் இல்லை. பெரும்பாலும் நான் பார்த்த பூனைகள் எல்லாமே பாலினைத் திருடிக் குடிக்கும் பழக்கமிருந்ததால் எப்போதோ வரும் திருடனைப் பிடிக்க, வீட்டிலேயே ஒரு திருடனை வளர்க்க விரும்பவில்லை.

இந்தச் சமயத்தில்தான் அந்தக் கேடுகெட்ட யோசனை தோன்றியது. ஒரு ஆசிரியராக இருந்து கொண்டு இப்படி ஒரு முட்டாள் தனத்தைச் செய்தது குறித்து வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன். ஆம்; இந்த எலியின் சேட்டைகள் நாளாக நாளாக அதிகரித்த வண்ணம் இருந்தன. இதன் தொல்லை தாங்கமாட்டாமல்தான் அப்படியொரு வினோத யோசனை எனக்குத் தோன்றிற்று. எங்கள் வீட்டிலுள்ள எலியை விரட்ட அதவிடப் பெரிய எலி ஒன்றைச் சாப்பாடு போட்டு வளர்க்கும் யோசனைதான் அது. இந்த யோசனை வரக் காரணம் இந்த ஊரில் உள்ள மாரப்பன் என்னும் மனிதர்தான். இவரைப் பார்க்கும் போதெல்லாம் மனிதன் குரங்கிலிருந்து வந்தானா, இல்லை யானையிலிருந்து வந்தானா என்று டார்வினின் பரிணாமக் கொள்கைகளை அசைத்துப் பார்க்கும் அசாதாரண தைரியம் எனக்கு ஏற்படும். அவ்வளவு குண்டான மனிதர் என்பதாலேயே ஊரில் பலரும் அவரைக் கண்டு கொஞ்சம் பயந்தே இருந்தனர். இதுதான் என் வீட்டிலிருக்கும் சின்ன எலியை ஒரு பெரிய எலியின் மூலம் விரட்டலாம் என்ற யோசனைக்கு வித்திட்டது.அது சரி பெரிய எலிக்கு எங்கே போவது?

அடுத்த நாளே இரும்பினால் செய்யப்பட்ட, கிளி வளர்க்கும் கூண்டொன்றை வாங்கி வந்துவிட்டேன். எலி பிடிப்பது ஒன்றும் பெரிய விசயமில்லை. பள்ளிச் சிறுவர்களிடம் சொன்னால் எப்படியேனும் பிடித்துக் கொடுத்துவிடுவர். ஒரு ஆசிரியராக இருந்துகொண்டு மாணவர்களைப் படிக்கச் சொன்னாலோ, திட்டினாலோதானே தவறு. இது போன்ற உதவிகள் கேட்பது பிரச்சினை இல்லை. என் நம்பிக்கையும் வீண் போகவில்லை. அடுத்த நாளே இரண்டு எலிக்குட்டிகளைப் பிடித்துக் கொண்டு வீட்டிற்கே வந்துவிட்டனர். இரண்டுமே அழகாக இருந்தன. அவற்றில் மிக அழகான ஒன்றை மட்டும் எடுத்து இரும்புக் கூண்டில் வைத்துவிட்டு , இன்னொன்றை விட்டுவிடுமாறு பையன்களிடம் கூறி அனுப்பினேன். அன்றிலிருந்துதான் ”மதியழகன்” என்னும் என் பெயர் “ எலிக்குட்டி வாத்தியார் “ ஆனது.

என் கவனம் முழுவதும் எலிக்குட்டியை வளர்த்து ஆளாக்குவதில் சென்றது. எத்தனையோ சத்தாண ஆகாரங்களைக் கொடுத்தும் பலனில்லை. அது அப்படியேதானிருந்தது. இப்பொழுது சொல்லப்போகும் விசயத்தைக் கேட்டால் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. ஆம்; காம்ப்ளான் குடிக்கிற குழந்தைங்க இரட்டிப்பு வேகத்துல வளர்றாங்க” என்னும் விளம்பரத்தினைப் பார்த்துவிட்ட்டு அந்த எலிக்குட்டிக்கும் சில பாட்டில்கள் காம்ப்ளானெல்லாம் வாங்கிக் கொடுத்தேன். காசு போனதுதான் மிச்சம். எத்தனை செலவு செய்தும் அது கொஞ்சம் கூட வளரவேயில்லை.

அந்த ஒரு மாத இடைவெளியில் பெரிய எலியின் அட்டகாசங்கள் அதிகரித்திருந்தன. என் இரண்டு, மூன்று சட்டைகளுக்குச் ஜன்னல் வைத்ததும் இதில் அடங்கும். ஆனால் என் தனிமையைப் பெரிதும் போக்கியிருந்தது. வீட்டில் இருந்த நேரங்களில் எல்லாம் எப்படி அதை விரட்டுவது என்றே யோசித்துக் கொண்டிருந்தேன். எத்தனை சேட்டைகளைச் செய்திருந்தாலும் ஏனோ எனக்கு அதனைக் கொல்லும் எண்ணம் வரவேயில்லை. நாளாக நாளாக அதன் சேட்டைகளை நான் ரசிக்கத் தொடங்கிவிட்டேன். இதனால் கூண்டில் இருந்த எலியையும் பையன்களிடம் கொடுத்தனுப்பிவிட்டேன். இந்த எலி என் தோழனாகவே மாறிவிட்டது. என் ஜட்டிகளை இது எடுத்து அணிந்து கொள்ளாவிட்டாலும் சில துணிமணிகளை தன் பங்கிற்காக எடுத்துச் சென்று வீட்டின் விட்டத்தில் கடித்துப் போட்டிருந்தது. என் நண்பர்களிடமும் கூட இதைப் பற்றிப் பேசியிருக்கிறேன். இதற்காகவே தினமும் வாழைப்பழம், பிஸ்கட் போன்றவற்றை வீட்டின் ஒரு இடத்தில் வைக்க ஆரம்பித்தேன். இதற்கு வாய் மட்டும் பேசத் தெரிந்திருந்தால் பள்ளிக்கூடத்திற்குக் கூட்டிச் சென்று படிக்க வைத்திருப்பேன்.

அன்று மட்டும் இது அப்படிச் செய்யாதிருந்தால் இதனை வஞ்சித்துக் கொல்ல வேண்டிய அவசியமே எனக்கு ஏற்பட்டிருக்காது. ஆம்; என் வாழ்க்கையையே திருப்பிப் போட்டுவிட்டது.

சஞ்சனா அழகே உருவான பெண். நான் பணிபுரியும் அதே பள்ளியில்தான் அவளும் பணிபுரிகிறாள். அவளைப் பார்த்தவுடனே எனக்குள் பட்டாம் பூச்சிகள் கோடி கோடியாய்ப் பறக்க ஆரம்பித்தன. நானும் அவளிடம் என் காதலைச் சொல்ல சில நேரங்களில் வாயெடுத்தும் சொன்னதில்லை. பயம். சில சமயம் கடிதமும் எழுதியிருக்கேன். ஆனால் உடனே கிழித்துவிடுவேன். ப்யம். சும்மாவா சொன்னார் வைரமுத்து

“அந்தக் கடவுளை விடவும் பெரியவன் ஒருவன் பூமியில் உள்ளான் எவன் ?
பெண் கண்களைப் பார்த்துக் காதல் சொல்லும் தைரியமுள்ளவன் அவன்! “ என்று.

அப்படியொரு தைரியமான நாளும் வந்தது. என் காதலை முழுவது ஒரு கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு , இன்று எப்படியும் கொடுத்துவிடுவது என்று தீர்மானித்துவிட்டுக் குளிக்கச் சென்றேன். திரும்பி வந்து பார்த்தால் நான் இரண்டு நாட்கள் கண்விழித்து எழுதிய , என் உயிரை ஊற்றி நிரப்பி வைத்த காதல் கடித்தத்தை முன்பொருமுறை தாயத்துத் தொங்கிய இடத்தில் வைத்துக் “ கரக் கரக்” கிக் கொண்டிருந்தது இந்தப் பாழாய்ப்போன எலி. கற்பனை செய்து பாருங்கள் என் சோகத்தை! இன்னொரு கடிதம் எழுதிக் கொடுக்கும் தைரியமெல்லாம் என்னிடம் இல்லை. ஆனால் தோல்வியின் வலியும், வேதனையும் கோபமாக வெளிப்பட்டுத் தினமும் வைக்கும் வாழைப்பழத்தில் விஷம் வைக்கவேண்டியதாய்ப் போயிற்று. இதோ இப்போது என் முன்னால் செத்துக் கிடக்கிறது இந்த எலி.

இனி என் வீடு அமைதியாய் இருக்கும். ஒயர்கள் கடிக்கப்படாது, சட்டைகள் ஓட்டையாகாது. பழங்கள், காய்கறிகள் திருடுபோகாது. இரவில் தலைக்கு மேலே சத்தம் கேட்காது. நிம்மதிதானென்றாலும் ஒருவித விரக்தியை உணர்கிறேன். மனிதனுக்குத் துணையாக இன்னொரு மனிதனே தேவையென்றில்லை. இது போன்ற உயிர்களும் தொல்லையென்றாலும் இவற்றை ரசிக்க ஆரம்பித்தால் நிச்சயம் மனிதர்களின் துணையை விட ஆத்மார்த்தமான துணையாக இருக்கவல்லன. பிறந்ததிலிருந்தே இது போன்ற உயிர்களைத் தொல்லையென்று சொல்லிச் சொல்லியே வளர்க்கப்பட்டுவிட்டோம்.

இனி என் வீட்டில் நான் மட்டுமே. யாருக்காகவும் பழங்களை மூடி வைக்க வேண்டிய அவசியமில்லை. காய்கறிகளை வாங்கிவந்து எங்கு வேண்டுமானாலும் போட்டுவிடலாம். இப்பொழுதுதான் எதையோ இழந்ததாக உணர்கிறேன். ஆம்; என் தோழனை நானே கொன்றுவிட்டேன். இனி யார் என் பொருட்களை என் அனுமதியின்றி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் ? கொஞ்சம் அமைதியாருங்கள். கூரையிலிருந்து ஏதோ சத்தம்.. அட மீண்டும் அதே “ கரக் கரக் “!

 நன்றி : இது அதீதம் இதழில் வெளிவந்த எனது சிறுகதை.

38 comments:

வைகை said...

இன்றுடன் அவன் கதை முடிந்தது. ஆறுமாத கால எதிரியை எத்தனையோ சூழ்ச்சிகள் செய்து இறுதியாகச் சாப்பாட்டில் விஷம் வைத்துதான் கொல்ல முடிந்திருக்கிறது//

என்ன்ன்ன? டெரர விஷம் வச்சு கொன்னிட்டியா? :-)

வைகை said...

இதோ என் கண் முன்னால் தன் நான்கு கால்களையும் பரப்பிக்கொண்டு , கோரமாகச் செத்துக் கிடப்பதைப் பார்க்கும்போது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை//

நல்லா பார்த்தியா? :-)

செல்வா said...

அவர் எலியாணா ?

வைகை said...

என் வாழ்க்கையில் ஏற்படுத்திய கொடூரங்களைத் தெரிந்து கொண்டால் அவனைத் தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் முக்கிய வில்லனாக நடிக்கச் சிபாரிசு செய்வீர்கள்!//

நாங்களெல்லாம் உன்னையவே பொறுத்துகிட்டு இருக்கோம்? :-)

வைகை said...

ப.செல்வக்குமார் said...
அவர் எலியாணா ?//


இல்லை.. எருமை :-)

செல்வா said...

@ வைகை :

நெசமாத்தான் சொல்லுறீங்களா ?

வைகை said...

கிராமத்திற்கும் , நகரத்திற்கும் இடைப்பட்ட இந்த ஊரில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில்தான் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன்//

அந்த புள்ளைங்கள நினைச்சா பாவமா இருக்கு :-)

வைகை said...

ப.செல்வக்குமார் said...
@ வைகை :

நெசமாத்தான் சொல்லுறீங்களா ?//


வேணும்னா அவனுக்கு கொஞ்சம் புண்ணாக்கு வச்சு பாரு.... மிச்சம் இல்லாம திண்பான் :-)

வைகை said...

இந்த ஊரில் தங்கத் தொடங்கிய முதல் நான்கு மாதங்கள் நன்றாகத்தான் கழிந்தன///

எது? எருமையா? :-)

வைகை said...

வாரத்திற்கு எப்படி எட்டாவது நாள் என்று குழம்பவேண்டாம்.////


நோ..நோ.. இந்த பதிவையே நான் வாரத்துல ஒன்பதாவது நாள்லதான் படிக்கிறேன் :-)

வைகை said...

இந்த வலையின் எலியை காணவில்லை.... ஆகவே வேறு வலை தேடி செல்கிறேன் :-)

maithriim said...

சற்றே பெரிஈய கதை :)ஆனால் வழக்கம் போல நல்ல நகைச்சுவை உணர்வோட பின்னப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே எலித் தொல்லை பயங்கர தொல்லை தான் :-)
amas32

Prabu Krishna said...

என் ஜட்டிகளை இது எடுத்து அணிந்து கொள்ளாவிட்டாலும்//

ஜஸ்ட் மிஸ். இது மட்டும் நடந்து இருந்தா. எலி ஏன் அம்மணத்தோடு ஓடுதுன்னு யாரும் கேட்டு இருக்க மாட்டாங்க. அத்தோடு உங்களுக்கும் எலிக்கு ஜட்டி கொடுத்ததால் எலியோன் என்று புகழ் கிடைத்து இருக்கும். மிஸ் பண்ணிட்டிங்களே.

செல்வா said...

// இந்த வலையின் எலியை காணவில்லை.... ஆகவே வேறு வலை தேடி செல்கிறேன் :-)//

எங்கே ?

செல்வா said...

// சற்றே பெரிஈய கதை :)ஆனால் வழக்கம் போல நல்ல நகைச்சுவை உணர்வோட பின்னப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே எலித் தொல்லை பயங்கர தொல்லை தான் :-)
amas32//

நன்றிங்க :)) மிக்க மகிழ்ச்சி.

செல்வா said...

// எலியோன் என்று புகழ் கிடைத்து இருக்கும். மிஸ் பண்ணிட்டிங்களே.//

இது வேறையா ? :))

வெளங்காதவன்™ said...

//வைகை said...

இன்றுடன் அவன் கதை முடிந்தது. ஆறுமாத கால எதிரியை எத்தனையோ சூழ்ச்சிகள் செய்து இறுதியாகச் சாப்பாட்டில் விஷம் வைத்துதான் கொல்ல முடிந்திருக்கிறது//

என்ன்ன்ன? டெரர விஷம் வச்சு கொன்னிட்டியா? :-)//

ஒழிந்தான் எதிரி!!!

முத்தரசு said...

6 மாசம் அதன்பா 180 நாளில் இவ்வளவு தானா ஹே ஹே ஹே

வெளங்காதவன்™ said...

ஏன் அறிவுக்கண்ணைத் திறந்ததிற்கு நன்றி!!!!

வெளங்காதவன்™ said...

என் அறிவுக்கண்ணைத் திறந்ததிற்கு நன்றி!!!!

செல்வா said...

@ வெளங்காதவன் :

அப்போ எலிதான் உங்க எதிரியாணா ?

செல்வா said...

@ மனசாட்சி :

180 நாளா ? இதென்ன கணக்கு ?

நாய் நக்ஸ் said...

Ithu
selva
blog thaane...??????

Illai......

True tamilan....
Blog-aaa????????

Adutha varudam
comment
poduren.....

Athukkulla
padichittaa...?????

Riyas said...

மிக அழகான சிறுகதை.. வாழ்த்துக்கள் செல்வா

Unknown said...

//அவனைத் தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் முக்கிய வில்லனாக நடிக்கச் சிபாரிசு செய்வீர்கள்!//

பழம் தின்னு புழுக்க போட்டவன்னு சொல்லுங்க......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இது எப்ப?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இதோ என் கண் முன்னால் தன் நான்கு கால்களையும் பரப்பிக்கொண்டு , கோரமாகச் செத்துக் கிடப்பதைப் பார்க்கும்போது //////

அது என்ன கோரமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கொஞ்சம் அமைதியாருங்கள். கூரையிலிருந்து ஏதோ சத்தம்.. அட மீண்டும் அதே “ கரக் கரக் “!///////

எலி பேயா வந்துடுச்சோ?

செல்வா said...

@ நாய்- நக்ஸ் :

மெதுவாவே வாங்க :))

செல்வா said...

@ ரியாஸ் :

ரொம்ப நன்றிங்க :))

செல்வா said...

@ வீடு சுரேஷ்குமார் :

ஆமாங்க. நிறைய புழுக்கை போட்டிருக்கு :))

செல்வா said...

@ பா.ரா :

// எலி பேயா வந்துடுச்சோ?//

இல்லைணா, அது மறுபிறவி எடுத்து வந்திருச்சு..

Madhavan Srinivasagopalan said...

இவ்ளோ பெரிசா எழுதாதப்பா..
படிக்க முடியல..

தட்சிணாமூர்த்தி said...

மொக்கை எழுத்தருக்கே உரிய எழுத்து நடை....அருமை....ஆனா ரொம்ப பெருசா இருக்கு அப்படின்னு சொல்ல மாட்டேன்...மொக்கை எழுத்தரா இருந்துகிட்டு சின்னதாவா எழுத முடியும்....ஹா ஹா by @rdhakshina

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கதை சூப்பர்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஆஹா, 'எலி'ய கதை.

Muruganandan M.K. said...

மீண்டும் அதே “ கரக் கரக் :) :)

Kasthuri Rengan said...

நல்லாகீது ...
வலைச்சரம் மூலம் வருகை.