Wednesday, August 8, 2012

வரிக்குதிரையின் கதை!

திரேதா யுகத்தில் நான் கடவுளின் மகவாகப் பிறந்திருந்தேன் என்பதை இப்பொழுது உங்களுக்கு நினைவுபடுத்துவது இந்தக் கதைக்கு பொருத்தமாயிருக்கும் என நம்புகிறேன்.

வரிக்குதிரை பிறந்த கதைக்கும் திரேதா யுகத்தில் நான் பிறந்ததற்கும் ஒரு நீண்ட நெடும் வரலாற்றுத் தொடர்புண்டு.

திரேதா யுகத்தின் மார்கழி மூன்றாம் நாள் அர்த்த ஜாமத்தில் பூமியே அதிரும்படியான ஒரு குழந்தையின் அழுகைச்சத்தம் கேட்டது. அப்படி ஒரு அழுகையை இது வரையிலும் இப்பூவுலகம் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. காட்டில் ஒன்றோடொன்று சண்டையிட்டு கண்களில் தீ ஜுவாலையைக் கக்கிக்கொண்டிருந்த இரு சிங்கங்கள் இந்த அழுகையைக் கேட்டுத் தத்தமது கோபத்தை மறந்து பயத்தில் நடுநடுங்கின.இருள் கூட விரைவாக ஓடி விட வேண்டுமென இறைவனிடம் வேண்டிக்கொண்டது. ஆம் அப்பொழுதுதான் கடவுளின் முதல் குழந்தையாக நான் பிறந்திருந்தேன்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துவந்தேன். என் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்தது என்று கூறுவது இங்கு சிறந்த உதாரணமென்றாலும் கடவுளின் குழந்தையாகப் பிறந்துவிட்டதால் அசுரவேகம் என்பது இப்பொழுது மட்டும் சரியாகாது.

எனக்கு 3 வயதிருக்கும் போது LKG அனுப்பத்திட்டமிட்டிருந்தார் எனது தாயார். ஆனால் அப்பொழுது அந்த வசதியில்லாமற் போகவே 5 வயதாயிருக்கும்போது எங்கள் நாட்டிலிருந்த சிறந்த ஒரு குருவிடம் கல்வி கற்பதற்காக அனுப்பினார்கள் என்னை.

முதல் நாள் எனது குருகுல வாசம் மிகச்சிறப்பாகவே இருந்தது எனக் கூறலாம். ஆனால் இது நடந்து கோடான கோடி வருடங்களாகிவிட்டதால் என்னால் சரியாக நினைவுபடுத்திக் கூற இயலவில்லை.அப்பொழுது ஜுனியர் ஹார்லிக்ஸ்சும் இல்லாததால் நான் TALLER,STRONGER,SHARPER ஆவதற்கான வாய்ப்புகள் எனக்கு அளிக்கப்படவில்லை.

இரண்டாம் நாள் என் குருகுலத்தில் நடந்த அந்த நிகழ்ச்சிதான் வரிக்குதிரை என்ற ஒரு புதிய இனம் உருவாகக் காரணமாயிருந்தது. ஆம் நான் சரியாக வீட்டுப்பாடம் எழுதாதைக் கண்டு என் குலகுரு அவரது கண்களை வியாழன் கோள் அளவு பெரிதாக்கி அதனைச் செவ்வாய்க் கோள் போலச் சிவக்க வைத்து என் முதுகில் ஓங்க ஒரு குத்து விட்டபடியே கேட்டார்“ஏன்டா TWO RULE,FOUR RULE எழுதல?"

அப்பொழுது “ TWO RULE " என்ற ஒரு வகையான நோட்டுப்புத்தகங்களே கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை அந்த அப்பாவி ஆசிரியர் அறிந்திருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் அவரின் அந்த அடிதான் வரலாற்றில் ஒரு புதிய உயிரினத்தையும் உருவாக்கும் என்பதையும் அறியாமல் கோபக்கனல் தெரிக்க என்னைப் பார்த்துகொண்டிருந்தார்.

நான் அழுதுபுரண்டு கொண்டே வீட்டிற்குச் சென்றேன். அவரைப் பழிக்குப் பழி வாங்க வேண்டுமென எனது தந்தையான கடவுளிடம் முறையிட்டேன். ஆனால் சாந்த சொரூபமான , கருணையே உருவான அவர் சொன்னார் “ ஆசிரியரை அடிக்க நினைப்பது பெருங்குற்றம். ஒருகாலும் நான் இதை ஒப்புக்கொள்ள மாட்டேன்.காலையில் உனக்கு வரி போட்ட நோட்டு வாங்கித் தருகிறேன் ” என்று கூறிவிட்டு தியானத்தில் ஆழ்ந்தார்.

மறுநாள் காலையில் நானும் எனது தந்தையும் வரிப்போட்ட நோட்டிற்காய் உலகெங்கும் வலம் வந்தோம். கிடைத்தபாடில்லை. கடுங்கோபமடைந்த என் தந்தை “எல்லாம் வரியாகப் போகக் கடவது” என்று சபித்துவிட்டார். அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தேறியது.

உலகமே வரிமயமானது. வரி மனிதர்கள், வரி யானைகள், வரி நோட்டுகள் , வரி சிங்கங்கள், வரி மலைகள் , வரி கொசுக்கள் , வரி வரியான நத்தைகள் , வரிப் பூரான்கள் இன்னும் ஏன் வரி வைரசுகள், வரி பாக்டீரியாக்கள் , வரி ரத்தச் சிவப்பணுக்கள், வரி ரத்த வெள்ளை அணுக்கள், வரி நியூட்ரான்கள், வரி எலக்ட்ரான்கள், வரி புரோட்டான்கள்,  வரி ஹிக்ஸ் போஸான் துகள்கள் என பூவுலகில் இருந்த அனைத்தும் வரிவடிவமாகிவிட்டிருந்தது. எங்கள் குருவும் இதற்கு விலக்காகவில்லை. அவரது உடலும் வரிவரியாக மாறியிருந்தது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த எனது குரு ” என்னை மன்னித்துவிடுங்கள் பிரபு, மாபாதகம் செய்துவிட்டேன் , மன்னித்தருளள் வேண்டும், உங்கள் சாபத்தை திரும்பப்பெற்றுக் காத்தருளள் வேண்டும், அடியேனை ரட்சிக்க வேண்டும் ” என்றவாரு என் தந்தையின் பாதங்களைப் பிடிக்கவந்தார். 

” குருதேவா ,என்ன காரியம் செய்கிறீர்கள்.? நீங்கள் என் கால்களைப் பிடிப்பதா? இதைவிடப் பெரிய பாவம் எனக்கில்லை! “ என்றவாரு விலகிக் கொண்ட என் தந்தை “ எனது சாவம் விமோசனம் பெற இந்தக் குடத்தில் உள்ள நீரை எல்லா உயிர்கள் மீதும் தெளித்தால் போதும் “ என்று கூறிவிட்டு ஒரு வீரனையும் அவனுக்கு ஒரு குதிரையும் கொடுத்தனுப்பினார்.

அவ்வீரனும் பூலோகம் முழுவதும் சுற்றி எல்லா உயிர்கள் மீதும் தெளித்துக் கடவுளின் சாபத்தைப் போக்கினன். ஆயினும் அவன் ஏறிச் சென்ற குதிரையை மறந்தனன்.அதன் மீது தெளிக்காமல் விட்டுவிட்டதால் அதன் உடல் அப்படியே வரிவரியாய் நிலைத்துவிட்டது. அந்த வரிக்குதிரையின் சந்ததிகளே இன்றும் வரிக்குதிரைகளாய் வாழ்ந்து வருகின்றன.


இத்துணை நேரமும் இதைக் கவனமாகப் படித்த உங்களை வாழ்த்தி வணங்கி விடைபெறுகிறேன், நன்றி வணக்கம்.

நீதி : இத நீங்க நம்புனா அதுக்கு நான் ஒன்னுமே பண்ணமுடியாது :)