Sunday, February 8, 2015

எலி - முதல் நாவல்

"நினைவழுத்தச் சுழல் வெளிகளின் எல்லையில்லா வெம்பரப்பில்" என்று ஆரம்பித்து எனது முதல் நாவலை எழுதிக் கொண்டிருக்கும்போது என் வலது கன்னத்தில் யாரோ சடாரென்று அறைந்தார்கள். அறைந்தால் சடாரென்று கேட்க வாய்ப்பில்லை என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. ஒரு கன்னத்தில் அறைந்தால் எதற்கு அறைந்தார்கள் என்று கேட்பதற்கு முன்னதாகவே அடுத்த கன்னத்தைக் காட்ட வேண்டுமென்று எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருப்பதால் அறை வந்த திசையில் எனது வலது கன்னத்தைக் காட்டியவாறே எழுதுவதைத் தொடர்ந்தேன். சில நொடிகள் தாமதத்திற்குப் பிறகு மீண்டும் வலது கன்னத்திலேயே அறை விழுந்தது. இந்த முறை சடாரில்லை. இதென்ன புதுப் பழக்கம்? ஒரு கன்னத்தில் அறைந்தால் அடுத்த முறை மறுகன்னத்தில் அறைய வேண்டும் என்ற இலக்கணம் கூடத் தெரியாத மூடன் எவன் என்றறிவதற்காக எழுதுவதை நிறுத்திவிட்டுத் திரும்பினேன். யாருமில்லை. உண்மையிலேயே யாருமில்லை; ஆனால், அடித்தது உண்மை. வலித்ததும் உண்மை. நான் என் நாவல் எழுதும் வேலையில் அதிகக் கவனத்துடன் இருந்ததால் அதிசயமாக விழுந்த இந்த அறையினைப் பற்றிக் கவலை கொள்ளாமல் அருகிலிருந்த ஹெல்மெட் ஒன்றினை எடுத்துத் தலையில் கவிழ்த்துவிட்டு மீண்டும் எழுதுவதைத் தொடர்ந்தேன்.

"அகப்படிம காட்சிச் சித்திரங்களின் கூரிய நனவோடையின்" - மறுபடியும் அதே வலது கன்னத்தில் சடார். ஹெல்மெட்டைத் தாண்டியும் சாத்தியமாகியிருந்தது. என்னுடைய பிரச்சினையெல்லாம் ஏன் வலது கன்னத்தில் மட்டுமே அறை விழுகிறது என்பதாக இருந்தது. இடது கன்னத்தைத் தொட்டுப் பார்த்தேன். அங்கே இடது கன்னம் இல்லை. இந்த இடத்தில் பெருமளவில் அதிர வேண்டும். நான் ஏற்கெனவே அதிர்ந்து முடித்துவிட்டதால் இப்பொழுது உங்கள் முறை. என்னுடனேயே இருந்த இடது கன்னம் எங்கே போயிருக்கும்? கண்ணாடியில் பார்த்தேன். அங்கே இடது கன்னம் இருந்த இடத்தில் " என்னை எழுதுவதாக இருந்தால் தமிழில் எழுது. வேறொரு பாஷையில் எழுதாதே" என்ற வார்த்தைகள் மட்டும் ப்ளாஷ் ஆகிக் கொண்டிருந்தன. ஆமாம், எலி நாவல் தான் எப்படி எழுதப்பட வேண்டுமென்று தானே முடிவெடுத்துக் கொண்டது. அதன் பிறகாகத்தான் எலியை எளிய வடிவில் எழுத ஆரம்பித்தேன்.


மேற்சொன்ன கதை நம்பும்படியாக இல்லை; அதுதானே? நம்பும்படியாக இருந்தால் அது எப்படி Fantasy ஆகும்? எலி கற்பனை மற்றும் மிகு கற்பனை வகையினைச் சார்ந்த நாவல். கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் தத்துவம் கலந்த த்ரில்லர் கதை. முற்றிலும் குழந்தைகளுக்கான கதைக்களமென்றாலும் அனேக இடங்களில் Black humor வகையில் முயற்சித்திருக்கிறேன். முதல் நாவல் என்பதால் நிச்சயமாய்க் குறைகளும் கலந்தே இருக்கலாம். அந்த வகையிலும் இது முக்கியமானது. ரியல் டைம் நாவல் என்றும் கூறலாம். 

முதல் நாவல் என்பதால் எனக்குத் தெரிந்த ஒரே மொழியான தமிழில்தான் எழுதியிருக்கிறேன். உங்களுக்குத் தமிழ் தெரிந்திருக்காவிட்டாலும் வாங்கிப் படிக்கலாம். எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தமிழைக் கற்றுக் கொண்டு படிப்பதானாலும் மகிழ்ச்சியே.



இணையம் சார்ந்தே எனது வாசிப்பும் எழுத்தும் ஆரம்பமானது என்பதால் இணையத்தில் எனக்கு முதலில் அறிமுகமான நண்பர் பரிசல்காரன் முன்னுரை எழுதியுள்ளார். எலி நாவலில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான பகுதி அது. முன்னுரை என்பதால் நாவலின் துவக்கத்திலேயே பதிப்பித்துள்ளோம். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பக்கங்களில் எலி நாவலை நீங்கள் வாசிக்கலாம். பின் அட்டைக்குப் பிறகாக வேறெதையும் பதிப்பிக்க வேண்டாமென்பதில் பதிப்பாளர் தீவிரமாக இருந்ததால் பின் அட்டைக்கு முன்பாகவே நாவலை முடித்திருக்கிறேன். தமிழில் இது ஏற்கெனவே செய்யப்பட்ட முயற்சிதானென்றாலும் எலி நாவலில் இது கச்சிதமாகப் பொருந்திப் போயிருக்கிறது.

எலி நாவல் கடந்த 7-02-2015 அன்று திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் சாரு அவர்களால் வெளியிடப்பட்டது. வா.மு.கோமு உடனிருந்தார்.



இனி புத்தகத்தைப் படிக்கப்போகும் உங்களின் விமர்சனங்களை எதிர்நோக்கியபடி காத்திருப்பதுதான் எனக்கு அழகு. எலி நாவலினைப் புத்தகமாக உருவாக்கியதில் என் பங்கினை விடவும் அனேகம் பேரின் உழைப்பும், வாழ்த்தும் இருக்கிறது. எல்லோரைப் பற்றியும் தனியாகப் பதிவதே நான் அவர்களுக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும். எலி நாவல் தற்பொழுது விற்பனையாகிவருகிறது.

எலி நாவலினை வாங்க - இங்கே கிளிக் செய்யவும்.

பதிப்பகம் :  நடுகல்.
பக்கங்கள் : 152.
விலை : Rs.130/-